மாஸ்கோ
மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரஷிய அதிபர் புதின் ரத்து செய்தார், அதற்குப் பதிலாக முற்றுகையிட உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு ரஷிய இராணுவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் வியாழனன்று உத்தரவிட்டார், அதற்குப் பதிலாக அதைத் தொடர்ந்து பாதுகாப்பாக முற்றுகையிடுமாறு கூறினார். புதின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுக்கு இந்த உத்தரவை வழங்கி உள்ளார்.
அசோவ்ஸ்டல் ஆலையைத் தவிர அனைத்து மரியுபோல் நகரமும் ரஷியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரின் முழு கட்டுப்பாட்டை பெற்றது வெற்றி என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரத்தில் சிக்கியுள்ள போராளிகள் மற்றும் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்க ரஷிய அதிகாரிகளுடன் "எந்தவித நிபந்தனையும் இன்றி" சிறப்பு சுற்று பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உயர்மட்ட உதவியாளர் உக்ரைன் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலில் உள்ள துருப்புக்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்ததை அடுத்து, வியாழன் அன்று ரஷியப் படைகள் கோட்டையைக் கைப்பற்றும் என கூறினார்.
கடைசி மணி நேரங்களில் சிக்கித் தவிப்பதாகவும், போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலக நாடுகள் உதவ வேண்டுமென உக்ரைன் கடற்படை தளபதி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோவில் உக்ரைன் கடற்படை 36-வது பிரிவின் தளபதி செர்ஹி வோலினா சில நாட்களோ அல்லது மணி நேரங்களோ உள்ளதாகவும், இதுவே தங்களது வாழ்வின் இறுதியாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.
தங்களை விட எதிரிப் படைகளின் பலம் பல மடங்கு பெரியது என தெரிவித்துள்ள அவர், வான், தரை என அனைத்து வகைகளிலும் ரஷியப் படைகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறினார்.