உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் மற்றும் ஜெர்மனி பிரதமருடன் புதின் தொலைபேசியில் பேச்சு

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாளாக தொடர்ந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது குறித்து ரஷிய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான நிலைகள் குறித்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள் கவலை எழுப்பினர். புதின் அவர்களுக்கு உக்ரைனின் உண்மையான கள நிலவரம் குறித்து விளக்கினார்.

மேலும் உக்ரைன்-ரஷியா இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தலைவர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது மேக்ரான் மற்றும் ஓலாப் ஸ்கோல்ஸ் உடனடி போர் நிறுத்தம் மற்றும் நெருக்கடிக்கு தூதரக ரீதியில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தனர் என கூறப்பட்டுள்ளது.