உலக செய்திகள்

இந்தோனேஷிய படகு விபத்து: 18 பேர் மீட்பு; மீண்டும் இன்று காலை மீட்பு பணி தொடங்கியது

இந்தோனேஷியாவில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் இன்று காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜகர்த்தா,

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆக தோபா ஏரி உள்ளது. உலகில் அதிக ஆழம் நிறைந்த ஏரிகளில் ஒன்றான இங்கு 80 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நேற்று மாலை பயணம் செய்தது.

கடுமையான காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மற்றொரு படகில் இருந்தவர்கள் உயிர் காப்பு கவசம் போன்றவற்றை நீரில் வீசி ஏரியில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சித்து உள்ளனர்.

இந்த மீட்பு பணியில் 2 படகுகளும் மற்றும் ஒரு மர படகும் ஈடுபட்டன. இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ளது. நேற்றிரவை விட இன்று பருவநிலை நன்றாக உள்ளது என இந்தோனேஷிய போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரி ஸ்ரீ ஹர்டியான்டோ கூறியுள்ளார்.