ஏமன்,
ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா தீவிரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.
இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தீவிரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன என கூறப்படுகிறது. இதில் அவர் கொல்லப்பட்டார்.
எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.