உலக செய்திகள்

போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை; இஸ்ரேலை கருப்பு பட்டியலில் வைத்த ஐ.நா. சபை

இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளும் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளார்.

டெல் அவிவ்

போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் நாடுகளை ஐ.நா. சபை கருப்பு பட்டியலில் வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பட்டியலில் இஸ்ரேலும் இணைந்துள்ளது. அந்த நாடு, காசாவுக்கு எதிராக நேரடி போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், போர் பகுதிகளில் அந்நாடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளது என்று தெரிவித்து, இஸ்ரேலை ஐ.நா. சபை கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதனுடன், இஸ்ரேல் சிறை துறை உள்பட பல்வேறு அமைப்புகளையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐ.நா. சபையின் இந்த முடிவு பற்றிய தகவலை ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேன்னி டேனன் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில், இஸ்ரேலை சேர்த்தது அரசியல் சார்ந்த ஒரு முடிவு என குறையாக கூறியுள்ளார்.

உண்மை மற்றும் நிதர்சனம் ஆகியவற்றில் இருந்து ஐ.நா. துண்டிக்கப்பட்டு விட்டது என குற்றச்சாட்டு தெரிவித்த அவர், ஐ.நா. அமைப்பின் அறிக்கைகளை மறுப்பதற்காக அதற்கான சான்றுகளை இஸ்ரேல் சமர்ப்பித்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதனை இஸ்ரேல் ஊடக தகவல்களும், இஸ்ரேலின் பிற அதிகாரிகளும் கூட உறுதிப்படுத்தி உள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல் படையினரின் பாலியல் தாக்குதல் மற்றும் வன்முறை அதிகரித்து உள்ளது என சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் வன்கொடுமை

இதுபற்றிய ஆய்வில், வெவ்வேறு தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்ட 75 பெண்களில் அனைவரும், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் ஏய்ப்பு மற்றும் அவமதிப்பு உள்ளிட்டவை நடந்துள்ளன என தெரிவித்து உள்ளனர். இவை தனி நபர்கள் அல்லது தனிப்பட்ட சம்பவங்களாக இல்லாமல், நன்றாக திட்டமிடப்பட்ட சம்பவங்களாக நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது.

இதனை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களுக்கான சட்ட உதவி மற்றும் கவுன்சிலிங் மையத்தின் உறுப்பினரான கிபாயா கூறுகிறார். இதில், இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளும் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளார்.