Photo Credit: AFP 
உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு, ஊரடங்குக்கு மத்தியில் 40 ஆயிரம் டன் டீசலுடன் இலங்கை சென்றது கப்பல்..!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் வேதனை அடைந்துள்ள அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு,

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ரால் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் வேதனை அடைந்துள்ள அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக நாளை பிரம்மாண்ட போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டதை ஒடுக்கும் வகையில், நேற்று இரவு இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து இருந்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில், இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தை இந்திய அறிவித்து இருந்தது. இந்த கடன் உதவியால், இலங்கைக்கு 40 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட டீசலுடன் கப்பல் சென்றுள்ளது. இந்தக் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டீசல் நாடு முழுவதும் இன்று மாலை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடுக்கு தற்காலிகமாக சற்று நிவாரணம் கிடைக்கும் என்று தெரிகிறது.