உலக செய்திகள்

சிங்கப்பூர் மத உணர்வை புண்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 14 வார சிறை தண்டனை

சிங்கப்பூர் மத உணர்வை புண்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 14 வார சிறை தண்டனை

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன் மோகனவேல் (வயது 36). இவருடைய பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் தங்களுடைய 3 குழந்தைகள், உறவினர், உதவியாளர் ஆகியோருடன் வசித்து வருகின்றனர். அவர்களுடைய குழந்தைகள் மோகனவேலின் குடியிருப்புக்கு அருகே உள்ள பொதுவெளியில் விளையாடி வந்துள்ளனர்.

இதனால், அவர் ஆத்திரமடைந்து உள்ளார். இதுதொடர்பாக சமூக போலீஸ் பிரிவை தொடர்பு கொண்டு அதிக சத்தம் கேட்கிறது என புகார் அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும் இதேபோன்று அவர்கள் விளையாடினர்.

இதனை அடுத்து, வீட்டில் சிலரை அழைத்து கொண்டாட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என அவர் குறையாக கூறினார். பக்கத்து வீட்டுக்காரர்கள் இஸ்லாமியர்கள். அந்த மதத்தில் பன்றிக்கறி தடை செய்யப்பட்ட ஒன்று என மோகனவேல் தெரிந்து வைத்திருந்துள்ளார்.

இதனால், ஒரு கேன் முழுக்க பன்றிக்கறியை கொண்டு வந்து இவருடைய வீட்டின் முன்தளத்தில் கொட்டியுள்ளார். இதனை அவர்கள் பார்த்து கடந்து செல்லட்டும் என நினைத்திருக்கிறார். இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்து சான்றுக்காக புகைப்படங்களை எடுத்து சென்றனர். பின்னர் மீண்டும் வந்து மோகனவேலை கைது செய்து அழைத்து சென்றனர்.

அவருக்கு மனநல மையத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய குற்றச்சாட்டும் உள்ளது. இதுபற்றிய வழக்கு விசாரணையில் அவருக்கு 14 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் போன்ற உலகின் பன்முக தன்மை கொண்ட நாட்டில், அதுவும் அதிக மக்கள் தொகை நாட்டில், சகிப்பு தன்மையுடன் மக்கள் வசிக்க வேண்டும். பல்வேறு சமூக மக்களுடன் வாழும்போது சில சமயங்களில் மோதல் ஏற்பட கூடிய சூழலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு துணை வழக்கறிஞர் சாங் கீ என் கூறினார். இந்த சம்பவத்திற்காக மோகனவேல் மன்னிப்பு கேட்டதுடன், வருத்தமும் தெரிவித்து கொண்டார்.