மொகாதிசு,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள்தான் அந்த நாட்டின் பல பகுதிகளை 2011ம் ஆண்டுவரை தங்கள் பிடியில் வைத்திருந்தனர்.
இப்போது அவர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரமான மொகாதிசுவில் உள்ள பிரசித்தி பெற்ற தயாஹ் ஓட்டலின் நுழைவுவாயிலில், நேற்று பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதினார். குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதே நேரத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஓட்டலினுள் நுழைந்து, அங்கிருந்த பாதுகாவலர்களுடன் துப்பாக்கிச்சண்டை நடத்தினர்.
கார் குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்து ஆம்புலன்சுகளும், பத்திரிகையாளர்களும் அங்கு விரைந்தபோது, அந்தப் பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்புகளால் அந்தப் பகுதியே குலுங்கியது. பெருமளவில் கரும்புகை மண்டலம் உருவானது.
13 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகள் 2 பேர் பலியானதாகவும் சொல்லப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.