உலக செய்திகள்

பாலியல் அடிமைகள் விவகாரம்; மன்னிப்பு கோர தென்கொரிய சபாநாயகர் மறுப்பு

2வது உலக போரில் கொரிய பெண் பாலியல் அடிமைகள் விவகாரத்தில் ஜப்பான் பேரரசரை பற்றி கூறியதற்கு தென்கொரிய சபாநாயகர் மன்னிப்பு கோர மறுத்துள்ளார்.

சியோல்,

2வது உலக போரின்பொழுது ஜப்பான் ராணுவ வீரர்களின் விபசார உபயோகத்திற்காக ஆசிய நாடுகளை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டனர். அதன்பின் அவர்களை கட்டாயப்படுத்தி ஜப்பான் ராணுவம் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி உள்ளது.

இந்த பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் தென்கொரியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த 1910ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை தென்கொரியா நாடு ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

இதுபற்றி கடந்த வாரம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த தென்கொரிய சபாநாயகர் மூன் ஹீ-சாங், ஜப்பானின் பிரதிநிதியாக பிரதமர் அல்லது ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ மனப்பூர்வ மன்னிப்பு கோருவது பாலியல் அடிமைகள் விவகாரத்தினை தீர்க்க கூடும் என கூறினார்.

இந்த பேட்டியில், போர் குற்றங்களுக்கான முக்கிய குற்றவாளியின் மகன் என ஜப்பான் பேரரசரை மூன் குறிப்பிட்டார். 2வது உலக போர் நடந்தபொழுது மற்றும் அதற்கு முன் அதிகாரத்தில் இருந்தவர் அகிஹிட்டோவின் தந்தை பேரரசர் ஹிரோஹிட்டோ. மூன் அவரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோர மூன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.