உலக செய்திகள்

வானிலை காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூலில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது தாமதம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூலைப் பயன்படுத்தி முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் பணியில் வானிலை காரணமாக தாமதம் ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் கேப்சூலைப் பயன்படுத்தி நாசா முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது. ரெசிலியன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேப்சூலில் 3 அமெரிக்க வீரர்களும், ஒரு ஜப்பானிய வீரரும் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்கின்றனர்.

உள்ளுர் நேரப்படி நாளை இரவு 7.27 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரால் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

வெப்பமண்டல புயல் காரணமாக புளோரிடா மீது கடுமையான, கடலோர காற்று வீசக்கூடும் என்ற முன்னறிவிப்பின் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட் 8 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கேப்சூல் மூலம் நாசா வீரர்கள் பயணிப்பது இதுவே முதன்முறை.