கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தனது வருவாயில் பெரும் பங்கை சுற்றுலாத்துறையை நம்பியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், இலங்கை சுற்றுலாத்துறையும் முடங்கியது. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இலங்கைக்கு 14 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் பணவீக்கமும் 12.1 சதவீதம் அதிகரித்தது.
அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், எரிபொருளை இறக்குமதி செய்யக் கூட போதிய நிதி இன்றி தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பெட்ரோல் பங்குகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை காண முடிகிறது.
இதற்கு மத்தியில், இலங்கையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 700 மெகா வாட் அளவுக்கு தேசிய பவர் கிரிட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.