கொழும்பு
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.
ராஜபக்சே மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகைத் தந்துள்ளனர். இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்த நிலையில், தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வலியுறுத்தினார்.
இதை மறுத்த சபாநாயகர் ராஜபக்சே உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தார். எனினும் சபையில் ராஜபக்சேவை பேச விடாமல் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாத ராஜபக்சே தனது உரையை ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து திட்டிய ராஜபக்சே அவர்களைப் பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளேன். ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை என கூறினார்.
ராஜபக்சே உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்சே -ரணில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்களிடையே மோதல் ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல் நடத்தபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சபையிலிருந்து சபாநாயகர் வௌயேறினார்.