இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த பயங்கர சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவசரநிலை பிரகடனம்
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையும் அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்பு
இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நெட்வோர்க் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.