கொழும்பு,
இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் தேதி திடீரென பதவி நீக்கி அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்தார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின் முதல் முறையாக நேற்று அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ரனில் விக்ரமசிங்கே பதவி நீக்கத்துக்கு அவரது கர்வமான நடத்தையே காரணம் என கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
2015-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர் விக்ரமசிங்கேயின் அரசியல் நடவடிக்கைகள் சரியில்லை. இலங்கையின் எதிர்காலத்தை, தன்னை சுற்றியிருப்பவர்களின் ஜாலி பொழுதுபோக்காகவே அவர் நடத்தினார். சாதாரண மக்களின் எண்ணங்களை பற்றி அவர் கவலைப்படவில்லை.
ஊழல் உள்ளிட்ட காரணிகளால் சிறந்த நிர்வாகத்தை அவர் முற்றிலும் சீரழித்தார். கொள்கை முடிவுகளில் எங்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. ரனில் நியமித்த மத்திய வங்கி கவர்னர் அர்ஜுன மகேந்திரன் மேற்கொண்ட பத்திர ஊழல் நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவை ஏற்படுத்தியது.
இதைப்போல என்னை கொலை செய்வதற்கு நடந்த சதியிலும் ரனிலின் பின்னணி இருப்பது குறித்து அறிந்தேன். இத்தகைய அரசியல், பொருளாதாரம் மற்றும் கொலை சதி நெருக்கடிகளுக்கு மாற்றாக, ஒரேயொரு நடவடிக்கை மட்டுமே என்னிடம் இருந்தது. அது முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பது மட்டும்தான். அதன்படியே ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு சிறிசேனா கூறினார்.