கொழும்பு,
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, ராஜபக்சே சகோதரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 19-ந் தேதி கொழும்புவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள ரம்புக்கானா பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மூத்த போலீஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் கேகாலை நகர கோர்ட்டில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டது. அதில், அவர் துப்பாக்கி குண்டு காயங்களால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.