உலக செய்திகள்

அரசியல்வாதிகளை குறிவைத்து தற்கொலைதாரிகள் தாக்குதல் நடத்தலாம் - பாக். பயங்கரவாத தடுப்பு படை

அரசியல்வாதிகளை குறிவைத்து தற்கொலைதாரிகள் தாக்குதலை நடத்தலாம் என பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு படை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது. அதன்படி தாக்குதல்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொகுதியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட 130 பேர் பலியாகிய சம்பவம் பாகிஸ்தானை உலுக்கியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையை எடுத்தோம் என்று கூறிவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்திற்கு ஊடகங்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கிடையே மஸ்தாங் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு படை, அந்நாட்டி பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது, அரசியல்வாதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம் என எச்சரித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல்கட்சியினர் என அனைவருக்கும் எதிராக தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என தேர்தல் ஆணையத்திடம் முழு நிலையையும் விவரித்துள்ளது. பயங்கரவாதிகள் கண்ணி வெடிகுண்டை பயன்படுத்தலாம், அல்லது தற்கொலைதாரிகளாக வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதிகள் கொலை வெறித்தாக்குதல் அரசியல் கட்சியினர் இடையே பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.