ஜெய்பூர்,
தென் கொரியாவின் சியோல் நகரில் பிறந்து வளர்ந்தவர் கிம் சுகி. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். வடகொரியாவில் 2011ம் ஆண்டு அனைத்து பல்கலை கழகங்களும் ஒரு வருடத்திற்கு மூடப்பட்டன. அங்கு படித்த மாணவர்கள் கட்டிட பணிக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் பியாங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் 270 மாணவர்கள் தொடர்ந்து படித்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். அதன் மாணவர்கள் ஆளும் வர்க்கத்தினரின் மகன்கள் ஆவர்.
அவர்கள் நாளொன்றுக்கு 3 முறை கிம் ஜாங் இல் மற்றும் வடகொரியாவை பற்றி புகழ்ந்து பாட வேண்டும். நீங்கள் இல்லையெனில் தாய்நாடு என்பது இல்லை. நீங்கள் இல்லையெனில் நாங்கள் இல்லை என்பது அதன் வரிகள்.
இந்த பல்கலை கழகத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிய சுகி கிம், இந்த வரிகளையே கிம் இல்லின் கடைசி 6 மாத கால ஆட்சியில் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வந்துள்ளார். இந்த வரிகள் அவர் எழுதிய நாவலின் தலைப்பு ஆனது.
சுகி கிம் இந்த பல்கலை கழகம் பற்றி செய்தியாளர்களிடம் விவரிக்கையில், சுற்றிலும் சுவர்களால் சூழப்பட்ட பல்கலையின் ஒவ்வொரு அறையிலும் கிம் 2 சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரது படங்கள் இடம்பெற்ற நிலையில் ஆங்கில ஆசிரியை பணியை ஏற்றேன்.
அடுத்த 6 மாதங்கள் ஆட்சியினரின் கண்காணிப்பின் கீழ் மாணவர்களுக்கு பயிற்றுவித்தேன். மாணவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பில் இல்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. உண்மையில் இதுபோன்ற ஆர்வத்தினை வெளிப்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
வடகொரியாவில் இருந்த காலத்தில் சுகி, தன்னால் முடிந்தபொழுது குறிப்புகள் எடுத்துள்ளார். அதன்பின் எழுதிய தகவல்களை பென் டிரைவில் பதிவு செய்து கொண்டார்.
இதுபற்றி கூறிய அவர், அந்நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது இல்லை. அனைத்தும் கண்காணிப்பின் கீழ் இருக்கும். நாட்டின் தலைவர் பற்றி மட்டுமே எழுத மற்றும் பேச அனுமதி உள்ள நிலையில், கலை மற்றும் இலக்கியம் பற்றி எப்படி ஒருவரால் பேச முடியும். அதன் (கலை மற்றும் இலக்கியம்) சாத்தியம் பற்றி ஒருவர் கவனத்துடன் யோசிக்க வேண்டும்.
முறையான பரிசோதனை மற்றும் ஆய்வு செய்யப்படாத வடகொரியா தொடர்புடைய எந்த ஒரு சிறிய செய்தி மற்றும் தகவலும் உண்மை என எடுத்து கொள்ள முடியாது என சுகி கூறி உள்ளார்.