பெய்ஜிங்,
சீனாவின் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001-ல் நிறுவப்பட்டது. இதன் உச்சி மாநாடு ஜூன் மாதம் சீனாவின் கிங்டாவோ நகரத்தில் நடைபெறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மந்திரிகள் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் நிர்மலா சீதாராமன் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதே சமயம் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
ஏற்கனவே நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி சீனா சென்ற சுஷ்மா சுவராஜ், பெய்ஜிங்கில் உள்ள எட்டு உறுப்பினர்களுடன் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு முகாமின் உச்சி மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரலை இறுதி செய்வதற்கான பணியை மேற்கொண்டார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 23-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இருவரும் அங்கு நடைபெறும் கூட்டங்களில், வர்த்தகம் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தானிய உறுப்பினர்களுடன் இருதரப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறாது எனவும் வெளியுறத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த மாநாடு, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் முழு உறுப்பினர்களாக கடந்த ஆண்டு இணைந்ததன என்பது குறிப்பிடத்தக்கது.