இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் திலீபன். விடுதலைப்போராட்டத்தின்போது, இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி உயிர்நீத்தார். அப்போது திலீபனுக்கு வயது 23. இவரது நினைவுநாளையொட்டி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது நினைவிடத்திற்கு சென்று நினைவஞ்சலி செலுத்துவதற்காக தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப்பின் எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன் சென்றார். அவரையும், அவருடன் சென்ற மேலும் இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு தங்களது ஒற்றுமையை காட்டியதாகவும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இலங்கை போலீசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.