வாஷிங்டன்,
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'டெஸ்லா' நிறுவனம், மின்சார கார் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் 8.6 சதவீத விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சான் மேட்டியோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் கிளை அலுவலகம் மூடப்பட்டு, அதில் பணிபுரிந்த சுமார் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 3 மாதங்களில், தனது நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்போவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.