உலக செய்திகள்

அன்று ஆப்கானிஸ்தான் மந்திரி... இன்று உணவு டெலிவரி செய்கிறார்

ஆப்கானிஸ்தான் தகவல் தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர் ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

பெர்லின்,

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு ஆட்சி செய்தபோது அந்த ஆட்சியில் 2016-18 வரை தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரியாக செயல்பட்டவர் சையது சதாத். 49 வயதான சையது ஆப்கானிஸ்தான் அதிபருக்கு நெருங்கிய வட்டத்திலான தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் அவர் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அவர் அங்கு இரட்டை குடியுரிமை பெற்றார். இதனை தொடர்ந்து, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தோடு 2020 ஆம் ஆண்டு சையது சதாத் ஜெர்மனி நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றுள்ள சையது ஜெர்மனியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை தேடி வருகிறார். ஜெர்மனிய மொழி தெரியாத காரணத்தால் சையது சதாத்திற்கு ஐ.டி.நிறுவனத்தில் வேலை கிடைப்பததில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.டி. நிறுவனத்தில் இதுவரை வேலை கிடைக்காததால் சையது ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். ஜெர்மனியின் லீப்ஜீங் நகரில் அவர் தனது சைக்கிளில் பயணித்து உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.

தகவல் தொடர்புத்துறை மந்திரியாக செயல்பட்டு தற்போது உணவு டெலிவரி வேலை செய்வது குறித்து கருத்து தெரிவித்துள்ள சையது சதாத், இதில் தனக்கு குற்ற உணர்ச்சியாக எதுவும் இல்லை என்றார்.