உலக செய்திகள்

அமைதிக்கான பாதை சுலபமானது அல்ல; இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கூறினார்

ஜெருசலேம்,

2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி மாலை 4.30 மணியளவில் இஸ்ரேல் சென்றார்.

இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது 2வது முறையாகும்.

இந்நிலையில் இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி ஜெருசலேமில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள், நட்பு, மரியாதை, கூட்டணி செய்தியை கொண்டுவந்துள்ளேன். 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். நாங்கள் உங்கள் வலியையும், வேதனையையும் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுடன் இந்தியா துணைநிற்கிறது. பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை எதைக்கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இது மத்திய கிழக்கில் நீண்டகால, நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். அமைதிக்கான பாதை எப்போதும் சுலபமானது அல்ல, ஆனால், மத்திய கிழக்கில் அமைதி, பேச்சுவார்த்தை நிலைத்தன்மைக்காக இந்தியாவும், உலகமும் உங்களுடன் சேர்ந்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக நிலையான ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுகிறது. ஏனென்றால் ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதம் இருந்தாலும் எல்லா இடத்திலும் அமைதிக்கு ஆபத்து நிலவும்

என்றார்.