உலக செய்திகள்

லண்டனில் பெண்ணுக்கு மிரட்டல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 6 வருடம் சிறை

லண்டனில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 6 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லண்டன்,

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிர்தாஜ் பாங்கல் (வயது 35) என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் 2013-ம் ஆண்டு சமூக வலைத்தளம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்புகொண்டார். ஆனால் அந்த பெண் அவரை சந்திக்கவில்லை. இதனால் அந்த பெண்ணுக்கு ஒழுங்கீனமான முறையில் தகவல்கள் அனுப்பினார். எனவே அந்த பெண் இவரது கணக்கை தடை செய்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் தொலைபேசி, கடிதங்கள் வழியாக ஆயுதங்களால் தாக்குவேன், திராவகம் வீசுவேன் என மிரட்டி தொந்தரவு கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள், சாமுராய் வாள்கள் மற்றும் திராவகம் போன்றவற்றை கைப்பற்றினர். இந்த வழக்கில் லண்டன் கோர்ட்டு சிர்தாஜ் பாங்கலுக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்தது.