தக்காளி சண்டை திருவிழா 
உலக செய்திகள்

ஸ்பெயினில் பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்

இந்த ஆண்டு தக்காளி திருவிழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 22,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புனோல்,

ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளி சண்டை திருவிழாவில், பழுத்த தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடியதால் பூனோல் நகரமே சிவப்பு காடாய் காட்சி அளித்தது. இந்த ஆண்டு தக்காளி சண்டையில் 165 டன் தக்காளி பிழியப்பட்டது.

தக்காளிப்போர்

ஸ்பெயினில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத கடைசி புதன்கிழமை அன்று இந்த வித்தியாசமான தக்காளி போர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புனோல் நகரில் குவிந்தனர்.

சிவப்பு நிறமாக மாறியது

விழா தொடங்கியதும், லாரிகளில் கொண்டு வரப்பட்ட டன் கணக்கிலான தக்காளிக்கூழ் குவியலில் மக்கள் உற்சாகமாக குதித்தனர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவருக்கொருவர் தக்காளிகளை வீசி் கொண்டனார். இதனால் அந்த நகரமே தக்காளி ரத்த வெள்ளம்போல் சிவப்பு நிறமாக மாறியது.

1.5 லட்சம் கிலோ தக்காளி

இந்த ஆண்டு விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 22,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக போர் செய்ய மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் தக்காளி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கருதி, தக்காளியை அப்படியே வீசாமல் கைகளால் நன்கு நசுக்கிய பின்னரே மற்றவர்கள் மீது எறிய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. விழா முடிந்தவுடன் தெருக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.