உலக செய்திகள்

சிரிய போராளி குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு?

சிரிய அதிபருக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை டிரம்ப் நிறுத்தி விட்டதாக அதிகாரிகள் கூறினர்.

வாஷிங்டன்

ரஷ்யாவுடனான ராஜீய உறவுகளை மேம்படுத்தவும், ஆயுதம் வழங்கியும் போராளி குழுக்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதும் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. முன்னாள் அதிபர் ஒபாமா இக்கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனுமதி கொடுத்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டில் துவங்கிய போர் சிறிய அளவிலான வெற்றிகளையே கொடுத்துள்ளது. இதனால் இதனை நிறுத்த அதிபர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்பும், புடினும் பேச்சு நடத்துவதற்கு முன்பே இது பற்றி முடிவு செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க நாளிதழ் கூறியுள்ளது.

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றி பரபரப்பாக விசாரணைகள் நடைபெறும் போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயுதம் வழங்கப்பட்ட சில குழுக்கள் ஐ எஸ் இயக்கத்துடன் இணைந்து விட்டனர் என்பதும் ஒரு காரணம் என்கின்றனர்.

பதவி ஏற்கும் முன் டிரம்ப் ஐஎஸ் இயக்கத்துடனான போருக்கு முன்னுரிமை கொடுத்து சிரிய அரசிற்கு எதிரான குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்த யோசிப்பதாக தெரிவித்திருந்தார். சிரியா ரசாயன தாக்குதலை துவங்கிய பிறகு இக்குழுக்களுக்கான உதவி அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.