இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்த்து வரும் பாகிஸ்தான், இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட முயன்று வருகிறது. ஆனால் இதில் தோல்வியடைந்து வருவதால் சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்று இந்தியாவை சிறுமைப்படுத்த முயன்று வருகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி கண்டித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், இந்தியாவையும், இந்தியர்களையும் சிறுமைப்படுத்துவதோ அல்லது அவமதிப்பதோ, அவர்களுடன் போட்டியிடுவதோ அல்லது ஒப்பிட்டு பார்ப்பதையோ விட்டு விட்டு, பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசிய நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் உசேன் ஹக்கானி, தற்போது அமெரிக்காவின் ஹட்சன் நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.