இஸ்தான்புல்,
துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. நிலநடுக்கங்களால், ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்த உலக நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தற்போதைய நிலவரப்படி துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழும் சுமார் 400-500 பேர் சிக்கியுள்ளனர், அதில் 10 பேர் மட்டுமே வெளியே எடுக்க முடிவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கடந்த 40 மணி நேரத்திற்குள் மட்டும் 500க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.