இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.
இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கிறார். இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான் கான் கட்சிக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.
இதில் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலந்து கொள்ளவில்லை. இம்ரான் கானுக்கு 176 வாக்குகளும், ஷாபாஸ் செரீப்பிற்கு 96 வாக்குகளும் கிடைத்தது. வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதை அடுத்து இம்ரான் கான் பாகிஸ்தானில் 22 வது பிரதமராக இன்று பதவியேற்றார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து கலந்து கொண்டார்.
முன்னதாக இம்ரான் கட்சியின் அரசியல் கட்சி தலைவர் பைசல் ஜாவித் கான் சித்துவை வரவேற்றார்.
ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற சித்து கூறியதாவது;-
"கான் சாகப் போன்றவர்கள் (இம்ரான் கான்) வரலாற்றை உருவாக்குகின்றனர். இந்த அழைப்பு மூலம், அவர்கள் என்னை கவுரவபடுத்தி உள்ளனர்.உறவுகளை கட்டியெழுப்ப மக்கள் மதிக்கப்படுகிறார்கள்,அதை உடைக்கும் மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.நான் உறவுகளை மதிக்கின்றவர்களில் ஒருவன். இது ஒரு புதிய விடியல் ஆகும்.உயர் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இந்த அரசாங்கம் இந்த நாட்டின் உணர்வை மாற்றுவதற்கு வந்து உள்ளது. என கூறினார்.
சித்து பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வாவை கட்டி தழுவி கொண்டார்.சித்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி (PoK) மசூத் கான் அடுத்து அமர்ந்திருந்தார்.
இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் இருந்து சித்தூவின் படங்கள் வெளிவந்தன, இந்திய டுவிட்டர் பயனாளர்களில் சிலர் அதனை விமர்சித்து உள்ளனர்.