தைபே,
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெரு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால், ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட 4 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த மூன்று தினங்களாகவே இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட இலேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு தைவானில் உள்ள நகரமான டைனானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் ஏற்பட்டோர் பலியாகினர்.
டெக்டானிக் பிளேட்டுகளின் சந்திப்பு இடத்தில் தைவான் அமைந்துள்ளதால், அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக ஒன்றான நிகழ்கிறது. கடந்த 1999-ம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Earthquake #Taiwan #tamilnews