லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதுபற்றி அந்நாட்டு ராணுவத்தின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியின்படி, முதல் தாக்குதல் சம்பவத்தில், தத்தாகேல் நகரில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது, பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ஹெலிகாப்டரில் ராணுவ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உள்ளது என தெரிவித்துள்ளது.
இதேபோன்று, இஷாம் பகுதியில் ஊடுருவல்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அஸ்மத்துல்லா கான் என்ற வீரர் உயிரிழந்து உள்ளார்.
நடப்பு ஆண்டில் முதல் 3 மாதங்களில் பயங்கரவாத தாக்குதல்களில் 97 வீரர்கள் உள்பட மொத்தம் 105 ராணுவத்தினர் உயிரிழந்து உள்ளனர். இதேபோன்று, 128 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும், 270 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.