உலக செய்திகள்

எகிப்தில் வான்வழி தாக்குதல்; 2 முக்கிய தீவிரவாத தலைவர்கள் பலி

எகிப்தில் நடந்த வான்வழி தாக்குதலில் 2 முக்கிய தீவிரவாத தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

கெய்ரோ,

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் பதுங்கு குழிகளுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் முக்கிய தீவிரவாத தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ராணுவ படையின் செய்தி தொடர்பு அதிகாரி டேமர் அல் ரெபாயி தெரிவித்து உள்ளார். எனினும் அவர்களது பெயரை வெளியிடவில்லை.

எகிப்தில் கடந்த வாரம் நாடு முழுவதும் நடந்த தீவிரவாத ஒழிப்பு பிரசாரங்களில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் அறிவித்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு ஜூலையில் முன்னாள் இஸ்லாமிய அதிபரான முகமது மோர்சி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கம் வளர்ச்சி அடைய தொடங்கியது. கெய்ரோ நகர் உள்பட வடக்கு சினாயில் இருந்து பிற மாகாணங்களுக்கும் தீவிரவாத தாக்குதல்கள் பரவ தொடங்கின.

இதில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற தாக்குதல்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.