இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய பயணிகள் வருகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குடியிருப்பு விசா பெற்றவர்கள் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் துபாய்க்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இதில் அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற புதிய நுழைவு விசா பெற்றவர்கள் துபாய்க்கு வருகை புரியலாமா? என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி மற்றும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதுபோல தற்போது ஏற்கனவே துபாயில் குடியிருப்பு விசா பெற்று வசித்து வருபவர்கள் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்து அனுமதி பெற்று வருகை புரிந்து வருகின்றனர்.
இதில் அந்த இணையத்தளத்தில் ரெசிடன்சி நம்பர் எனப்படும் ஏற்கனவே துபாயில் வசிப்பவர்களுக்கு அளிக்கப்படும் எண்ணானது பதிவு செய்யப்பட வேண்டும். பணிக்கான நுழைவு விசாவில் அந்த எண் இருக்காது. எனவே இ-விசா பெற்றவர்கள் அல்லது பணிக்கான நுழைவு விசா பெற்றவர்கள் தற்போது இந்தியா உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணம் செய்ய முடியாது. குடியிருப்பு விசா பெற்று பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.