உலக செய்திகள்

உகாண்டாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த வரி விதித்ததற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

உகாண்டாவில் சமூகவலைதளங்கள் பயன்படுத்த வரி விதித்ததற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. #UgandaProtest

கம்பாலா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அண்மையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல், இணைய சேவையை தவிர்த்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தினசரி 200 உகாண்டா சில்லிங் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு அமலானது.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த வரி விதிக்கப்பட்டது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில், நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசி போராட்டத்தை காவல் துறையினர் கலைத்தனர்.

புதிதாக அமல்படுத்தியிருக்கும் வரியிலிருந்து பெறப்படும் பணம், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என உகாண்டா அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் உகாண்டாவை ஆட்சி செய்து வரும் ஜனாதிபதி யோவெரி முசுவெனி, சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு வரி விதிக்க கோரி முதலில் அறிவித்தார்.

41 -மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள உகாண்டா நாட்டில், 17 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்தரம் பறிக்கும் நோக்கில் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வரியை நீக்க கோரரி உகாண்டா அரசுக்கு ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வற்புறுத்தியுள்ளது.