லண்டன்,
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய்த் தடுப்பு மருந்து, தற்போது தடுப்பூசி மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-வி, ஆஸ்ட்ரா ஜெனகா, கோவேக்சின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் மாத்திரை வடிவிலான கொரோனா தடுப்பு மருந்தை பைசர் நிறுவனம் தயாரித்துள்ளது. பேக்ஸ்லாய்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரைக்கு இங்கிலாந்து சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த மாத்திரையை உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் ஆகியோர் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அறிகுறி தென்பட்டு 5 நாட்களுக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால் தீவிர பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும் எனவும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் இருந்து பேக்ஸ்லாய்ட் மாத்திரை 90 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக இந்த பேக்ஸ்லாய்ட் மாத்திரை சிறப்பாக செயலாற்றக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.