லண்டன்,
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஆனால் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமானதால் அவர் ஏப்ரல் 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மறு நாளே (ஏப்ரல் 7) ஜான்சனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதனால் சாதாரண வார்டில் இருந்த போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜான்சனில் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தற்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.