காசா நகரம்,
இஸ்ரேல் நாட்டின் எல்லையருகே பாலஸ்தீனத்தின் ஆயிரக்கணக்கான காசா நகரவாசிகள் பேரணியாக சென்றனர். இதில் இஸ்ரேலின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லையை சுற்றிய பகுதிகளில் இருந்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல செய்வதற்காக கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர். தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்பொழுது, எல்லைக்குள் ஊடுருவ அல்லது தாக்குதல்களை நடத்துவதற்காக இந்த போராட்டத்தினை தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இது அமைதியான போராட்டம் இல்லை. இந்த போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஐ.நா. சபையின் பொது செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காசா நகரவாசிகளின் மீது நடந்த தாக்குதலில் சுதந்திர அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் குறிப்பிடும்படியாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான எந்த நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் செயல்களில் இருந்து அதற்கு பொறுப்பு ஆனவர்கள் விலகி இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டத்தின் கீழ் இஸ்ரேல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.