உலக செய்திகள்

போர்க் குற்றம் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: ஐநா வலியுறுத்தல்

போர்க் குற்றம் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு,

இலங்கை இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் ஐநாவுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இலங்கை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தின் சயீது ராத் அல் ஹூசைன், கொழும்புவில் கூறியதாவது:- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தீர்மானத்தின் கீழ், பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகள் மீதான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

போரில் மாயமானவர்கள் குறித்த விவகாரங்களை கவனிக்கும் தனி அலுவலகங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர் நிலங்களை திருப்பித் தருதல், இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாகத் தீர்த்து வைத்தல் போன்று தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.


போர்க் குற்ற விசாரணை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளில் அரசு மெத்தனமாக செயல்படுவதையே வடக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன. எனவே, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை உருவாக்கி, அதனை இலங்கை அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.