வாஷிங்டன்,
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுத்தது. இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
எனினும், போரானது தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து உள்ளது.
உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது. நேட்டோவில் உறுப்பினர் அல்லாத நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் களமிறங்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரஷிய தூதரகம் தனது டெலிகிராம் சேனல் வழியாக வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைன் நாட்டில் உள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ உயிரியல் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை உடனடியாக அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இந்த செயல்களுக்கு பின்னால், பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) அமைப்பு இருக்கும்போது, எந்த வகையான அமைதியான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.