உலக செய்திகள்

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம்: அமெரிக்கா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 133 பேர் உயிரிழந்தனர். இதனிடையே இச்சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #USCondemns #PakAttack

வாஷிங்டன்,

பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பான்னு மற்றும் வடக்கு வசிரிஷ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது திடீரென குண்டு வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ள நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஹீதேர் நாவெர்ட் பேசுகையில், பாகிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கோழைத்தனமானது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து பாகிஸ்தான் மக்களோடு துணை நிற்போம். தெற்கு ஆசிய எல்லைப்பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் எனக் கூறினார்.