இஸ்லமாபாத்,
அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் நல்லுறவு முஸ்லீம் உலகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று பாகிஸ்தான் செனட் சபை தலைவர் ரசா ரப்பானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் செனட் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் நட்புறவு முஸ்லீம் உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது. எனவே, இதை எதிர்கொள்ள முஸ்லீம் உலகம் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில், இன்று பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாளை எந்த ஒரு நாடாகவும் இருக்கும்.
சட்ட ரீதியான மற்றும் வரலாற்று அந்தஸ்து கொண்ட ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அப்பட்டமாக மீறிய செயல் ஆகும் என்று தெரிவித்தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். எனினும், பயங்கரவாதம் மற்றும் அராஜகத்திற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான பங்களிப்பை அளிக்கும் எனவும் தெரிவித்தார். #pakistan #US