வாஷிங்டன்,
அமெரிக்காவில் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு வயது வரம்பை 34-லிருந்து 42-ஆக அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா திடீரென வயது வரம்பை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் -அமெரிக்கா இடையேயான போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது 5 நாட்கள் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளையில், ஈரான் மீதான போரை தொடர சவுதி அரேபியா ரகசியமாக அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல், ஈரான் மீது தரை வழி தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற தகவலும் சர்வதேச நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழலில், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை அமெரிக்கா உயர்த்தியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம் ராணுவத்திற்கு அதிக நபர்களை சேர்க்க முடியும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவே நீடிக்கிறது; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் விமானப்படை, கடற்படை, ராணுவம் என முப்படைகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.