உலக செய்திகள்

ஈரான், குவைத் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு

வளைகுடா நாடுகளில் தங்களது படைகள், தூதரகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மகள், மருமகன், பேரன் உள் ளிட்டோரும் இந்த கொடூர தாக்குதலில் பலியாகினர்.

டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை பறிகொடுத்ததால் ஆவேசத்துடன் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலை நோக்கி அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகிறது.

மறுபுறம் அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இதில் குவைத்தில் பணியமர்த்தப்பட்டு இருந்த 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இஸ்ரேலிலும் கணிசமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

உலகையே உலுக்கி வரும் இந்த போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. இருதரப்பும் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில் ஈரான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூதரக விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மோரா நாம்தார் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கர்கள் எதிராக கடுமையான பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, கிடைக்கக்கூடிய வணிகப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வணிக வழிகளில் புறப்பட ஏற்பாடு செய்ய வெளியுறவுத்துறை உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள், +1-202-501-4444 (வெளிநாட்டிலிருந்து) மற்றும் +1-888-407-4747 (அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து) என்ற எண்ணில் 24/7 என்ற எண்ணில் அமெரிக்காவை அழைக்கவும். அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகத்திலிருந்து சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற http://step.state.gov இல் பதிவு செய்யவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.