உலக செய்திகள்

ஹார்முஸ் வழியாக இனி எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் அமெரிக்காவுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அமெரிக்கா துணை அதிபர் ஜேடிவான்ஸ் பாகிஸ்தானில் இருந்து உடனடியாக அமெரிக்கா திரும்பினார்.

பேச்சுவார்த்தை தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்த டொனால்டு டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிடும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது:

”ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை. எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியைத் தொடங்கும்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தே வைத்து இருப்போம் என்ற உத்தரவாதத்தை ஈரான் மதிக்கவில்லை. கண்ணிவெடிகள் இருப்பதாக அச்சுறுத்தல் இருப்பதால் அவ்வழியாக கப்பல் போக்குவரத்து ஏற்கனவே முடங்கியுள்ளது. எங்காவது கடலில் குண்டு இருக்கலாம் என்று ஈரான் கூறி வருகிறது. அப்படியானால் எந்த கப்பல் உரிமையாளரும் அந்த அபாயத்தை ஏற்க விரும்புவார்கள்?” என்று கூறியுள்ளார்.

மேலும் டிரம்ப் கூறியிருப்பதாவது: ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் இந்த விவகாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.