உலக செய்திகள்

ரஷியாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி: உருவாக்கிய நிறுவனம் தகவல்

ரஷியாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என்று தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில், அதன் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

அதைத் தொடர்ந்து உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்து, பதிவு செய்து இருப்பதாக ரஷிய அதிபர் புதின் கடந்த 11-ந் தேதி அறிவித்தார். இது உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசி பற்றி கமலேயா நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், மாஸ்கோவில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று கூறுகையில், தடுப்பூசியை திரளான மக்களுக்கு போடுவது சற்று தாமதமாகும். உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் முக்கிய பகுதி, பதிவுக்கு பிந்தைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். அதன்பிறகுதான் தடுப்பூசி விற்பனைக்கு கிடைக்கும். 2-3 வாரங்கள் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என குறிப்பிட்டார். எனவே ஒரு மாதத்தில் தடுப்பூசி திரளான மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்.

அதே நேரத்தில், பதிவுக்கு பிந்தைய ஆய்வுகள் நடந்து முடிவதற்கு 6 மாதங்கள் வரைகூட ஆகலாம் என அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.