காபூல்,
ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கோர் மாகாணத்தில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் பெரோஸ் கோவில் உள்ள கவர்னர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களில் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.