டெல் அவிவ்,
இஸ்ரேலில் அரபு சமூகத்தினருக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. இதில், நேற்றிரவு 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாட்டவர் படுகொலை தொடர்பாக போலீஸ் அதிகாரி டேனி லெவி கூறும்போது, நாட்டில் அவசரநிலை காணப்படுகிறது என கூறினார்.
இதில் நேற்றிரவில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் ரஹாத் நகர முன்னாள் மேயரின் 22 வயது மகனும் ஒருவர் ஆவார். இந்த சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதவிர, இன்று காலை 2 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதில், சாலையோரம் இன்று காலை காரில் சென்ற நபர் ஒருவரை வழிமறித்து, நெருங்கிய தொலைவில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விட்டு குற்றவாளிகள் தப்பியோடினர். ஸ்கூட்டரில் வந்த முக கவசம் அணிந்த நபர் ஒருவர் மற்றொரு அரேபியரை சுட்டு கொன்று விட்டு தப்பியுள்ளார்.
இந்த ஆண்டு தொடங்கி 42 நாட்கள் கடந்துள்ள சூழலில், 46 அரேபியர்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் 252 பேர் பலியான சூழலில், இந்த ஆண்டில் பலி எண்ணிக்கை தொடரும் பட்சத்தில் அது அதிக அளவாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.