உலக செய்திகள்

அமெரிக்காவில் முக கவசம் அணிவது வரும் மே 3ந்தேதி வரை நீட்டிப்பு

அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து வருகிறது.

எனினும், சுகாதார நலனை முன்னிட்டு முக கவசம் அணிதலை பைடன் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீட்டித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முக கவசம் அணிவது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளது.

இந்த நடவடிக்கையின்படி, அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, பொதுமக்கள் எந்த வகையிலான போக்குவரத்து (எடுத்துக்காட்டாக, விமானங்கள், ரெயில்கள், புறவழி பாதைகள், பேருந்துகள், டாக்சிகள், படகுகள், கப்பல்கள், டிராலிகள் மற்றும் கேபிள் கார்கள்) பயன்படுத்தினாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்போதோ அல்லது உள்நாட்டுக்குள்ளேயே பயணிக்கும்போதோ வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடியிருக்கும்படியாக முக கவசம் அணிவது அவசியம் என்று தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT