Image Credits: AI 
உலக செய்திகள்

தேவையில்லாத அழைப்புகளை கட்டுப்படுத்த வாட்ஸ் அப்பில் வசதி

வாட்ஸ்அப்பில் “அறியப்படாத அழைப்பாளர்களை நிறுத்து” என்ற சிறப்பம்சம் இருக்கிறது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ் அப்பில், அவ்வப்போது புதிய அப்டேட்களையும் பாதுகாப்பு அம்சங்களையும் மெட்டா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தவும் ஒரு ஆப்ஷன் உள்ளது. இது பலருக்கும் தெரிவது இல்லை.

அதாவது, வாட்ஸ்அப்பில் “அறியப்படாத அழைப்பாளர்களை நிறுத்து” என்ற சிறப்பம்சம் இருக்கிறது. இதை ஆன் செய்தால், தேவையில்லாத அழைப்புகளிளின் தொந்தரவில் இருந்து உடனே விடுபடலாம். வாட்ஸ்அப், பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு “Silence Unknown Callers” என்ற இந்த ஆப்ஷனை வைத்து இருப்பதாக வாட்ஸ் அப் கூறுகிறது.

இது எப்படி செயல்படும் என்றால், செட்டிங்ஸில் உள்ள இந்த ஆப்ஷனை ஆன் செய்தால், உங்கள் போனில் சேமித்து வைக்கப்பட்ட எண்கள் அல்லாமல் புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் உங்கள் போன் ரிங்டோன் ஒலிக்காது. தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்அப் தானாகவே சத்தமில்லாமல் விடும். இதனால், நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது ஓய்வெடுத்து கொண்டிருந்தாலும் தேவையில்லாத அழைப்புகள் உங்களை தொந்தரவு செய்யாது. பிறகு உங்கள் வாட்ஸ் அப் கால் ஹிஸ்ட்ரியை பார்த்தால் யாராவது போன் செய்து இருந்தால் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அழைப்பு வரும் பொழுது எந்த சத்தமும் கேட்காது. இது பயனர்களுக்கு தேவையற்ற தொந்தரவை தவிர்க்கும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.