இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இதுவரை கொரோனா தொற்றால் 30 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசு கூறி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் அரசு உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி அப்துல் காதிர் படேல் கூறுகையில், நாங்கள் கொரோனா இறப்பு தகவல்களை நேரடியாக சேகரித்து தருகிறோம் இதில் நூறு, இருநூறு வித்தியாசம் இருக்கலாமே தவிர லட்சக்கணக்கில் இருக்காது. எனவே உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைமையின் மீது கேள்வி எழுகிறது என்றார்.