மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரிய வாலிபர் கைது

போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரிய வாலிபரை கைது செய்து போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கையாக தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் அமீர் அகமது ஆகியோர் தலைமையில், பரங்கிமலை இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் ஒரு கட்டிடத்தில் ரகசியமாக போதை பொருட்கள் விற்பனை செய்த நந்தகுமார்(வயது 23), திருளாபதி(24), விஜய் (27) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், உடலில் ஊசி மூலம் செலுத்தி பயன்படுத்தும் ஆம்பெட்டமைன் போதை பவுடரை கன்னியாகுமரியை சேர்ந்த அருண்பாண்டியன்(30) பெங்களூரில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து நைஜீரிய வாலிபர் அகஸ்டின், நந்தகுமார், திருளாபதி,விஜய், அருண்பாண்டியன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.